பக்கங்கள்

16 செப்டம்பர் 2010

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த 6 வயது மகளுக்கு சூடு வைத்து சித்ரவதை!

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்ததால் சொந்த மகளை இரும்புக்கம்பியால் சூடுவைத்து சித்ரவதை செய்த பள்ளிக்கூட ஆசிரியை கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடாச்சலம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சைதன்யா. இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன் இவருடைய கணவர் இறந்து விட்டார்.
இதனால் தனது 6 வயது மகளுடன் சைதன்யா தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த நாகேஷ் என்பவருடன் சைதன்யாவுக்கு தொடர்பு ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
சில நேரங்களில் இவர்களின் கள்ளக்காதலுக்கு சைதன்யாவின் மகள் தடையாக இருந்ததாக தெரிகிறது. இதனால் கடந்த 4 நாட்களாக தனது மகளை இரும்புக்கம்பியால் சூடு வைத்து சித்ரவதை செய்து உள்ளார்.
சூடு தாங்காமல் வலியால் அவள் கத்தித்துடிக்கும் போது டி.வி.யின் சத்தத்தை அதிகமாக வைத்து உள்ளார். அந்த வீட்டில் அடிக்கடி டி.வி.யின் சத்தம் அதிகமாக கேட்டதால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டினர் சென்று பார்த்தபோது, வீட்டில் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் அந்த சிறுமி இருந்தாள்.
உடனே அவளை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு இதுபற்றி அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து விசாரணை நடத்தியதில் சைதன்யாவின் கள்ளக்காதலுக்கு தடையாக மகள் இருப்பது தெரியவந்தது.
இதனால் சைதன்யா மற்றும் அவருடைய கள்ளக்காதலன் நாகேசை போலீசார் கைது செய்தனர். படுகாயம் அடைந்த சிறுமி குணம் அடைய இன்னும் ஒரு வாரம் ஆகும் என்றும். பின்னர் அரசு குழந்தைகள் நல காப்பகத்தில் சிறுமி தங்கி இருப்பாள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக