பக்கங்கள்

27 ஏப்ரல் 2013

இனியாவின் முத்தக் கோபம்!

இனியா 
‘முத்தக்காட்சியில் நடித்தால் சர்ச்சை கிளப்புவது ஏன்?‘ என்றார் இனியா. வாகை சூடவா, அம்மாவின் கைப்பேசி, சென்னையில் ஒரு நாள் போன்ற படங்களில் நடித்திருப்பவர் இனியா. அவர் கூறியதாவது: மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான டிராபிக் படம் தமிழில் ‘சென்னையில் ஒரு நாள்‘ என்ற பெயரில் ரீமேக் ஆனது. ‘டிராபிக்‘ல் ரம்யா நம்பீசன் ஏற்று நடித்த வேடத்தை தமிழில் நான் நடித்தேன். இதைத் தொடர்ந்து ரம்யா நம்பீசன் நடித்த ‘சாப்பா குரிஷு‘ என்ற படம் தமிழ் ரீமேக்காக புலிவால் என்ற பெயரில் உருவாக உள்ளது. கிராமத்து வேடங்களில் என்னை பார்த்தவர்கள் மாடர்னாக துணிச்சலான வேடங்களில் நடிக்கும்போது அதை சர்ச்சையாக்குகிறார்கள். ‘அம்மாவின் கைப்பேசி‘ படத்தில் ஹீரோவுடன் நடித்த முத்தக்காட்சி விமர்சிக்கப்பட்டது. ‘புலிவால்‘ படத்திலும் முத்தக்காட்சி இருக்குமா என்கிறார்கள். மலையாளத்தில் இப்படம் வெளியானபோது ஹீரோ பஹத் பாசலுடன் ரம்யா நம்பீசன் நடித்த முத்தக்காட்சி இடம்பெற்றது. தமிழில் அப்படியே ரீமேக் செய்வார்களோ என்ற சந்தேகம் இருந்தது. ‘புலிவால்‘ படம் சீன் பை சீன் அப்படியே காப்பி அடித்து எடுக்கப்போவதில்லை. இவ்வாறு இனியா கூறினார்.

24 ஏப்ரல் 2013

தமிழில் நடிக்காமல் ஒதுங்கும் பிரணிதா!

பிரணிதா 
‘சகுனி‘ படத்தில் நடித்தவர் பிரணிதா. இப்படத்துக்கு பிறகு புதிய படங்களில் நடிக்காமல் பிற மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழ் பட வாய்ப்புகள் வந்தும் ஏற்காமல் ஒதுங்குவதாக கூறப்படுகிறது. இது பற்றி பிரணிதா கூறியதாவது: தமிழில் உருவான ‘சகுனி‘ தெலுங்கில் ‘ஷக்குனி‘ என்ற பெயரில் வெளியானது. ‘தமிழ் படங்களைவிட்டு ஒதுங்கி இருப்பது ஏன்?‘ என்கிறார்கள். கன்னடத்தில் ‘மிஸ்டர் 420‘ படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறேன். மேலும் 2 கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்கிறேன். தமிழில் வாய்ப்புகள் வருகிறது. தற்போது நடித்து வரும் படங்களை முடித்தபின் அதை ஏற்பேன். எனது தாய்மொழி கன்னடம். கன்னட படங்களில் நடிப்பது சவுகரியம். தெலுங்கு படங்களில் ரீ என்ட்ரி ஆகிறேன் என்று தகவல் வெளியானதும் நிறைய படங்கள் வருகிறது. தெலுங்கில் ‘பாவா‘ படம் ரிலீஸ் ஆகி நல்ல பெயர் கிடைத்துள்ளது. ‘இணைய தள டுவிட்டர் பக்கத்தில் அதிக ஆர்வம் காட்டுவது ஏன்?‘ என்கிறார்கள். அந்த பக்கத்துக்கு நான் அடிமையாகிவிட்டேன். இதன் மூலம் ரசிகர்களிடமும், திரையுலகினருடனும் நேரடியாக தொடர்புகொள்ள முடிகிறது. அவர்களின் கருத்துக்கள் உடனுக்குடன் கிடைக்கிறது என்றார்.

23 ஏப்ரல் 2013

லால்குடி ஜெயராமன் மறைந்தார்!

பிரபல வயலின் இசைக் கலைஞர் லால்குடி ஜெயராமன் நேற்று  திங்கட்கிழமை சென்னையில் தமது 82 வது வயதில் காலமானார். பக்கவாத பாதிப்பு ஏற்பட்ட பிறகு சில காலம் அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். திருச்சி மாவட்டம் லால்குடியில் பிறந்த அவர் பல இசை மேதைகளுக்கு பக்கவாத்தியம் வாசித்தும், தனியாகவும் சுமார் 70 ஆண்டுகள் இசை உலகில் பிரகாசித்து வந்தார். வயலின் வாசிப்பில் 'லால்குடி பாணி' எனும் முறையை ஏற்படுத்தியவர் என்கிற பெருமையும் அவருக்கு உண்டு. அவரது வயலின் வாசிப்பு ஏறத்தாழ பாடுவது போலவே இருக்கும் என்று இசை விமர்சகர்கள் கூறுவார்கள். அனைத்துவித இசைக்கருவிகளின் தனித்தன்மைகளையும் நன்குணர்ந்திருந்தவர் லால்குடி ஜெயராமன் என்று அவருடன் நெருக்கமாக இணைந்து இசையுலகில் பயணித்தவர்கள் சொல்வார்கள். கர்நாடக இசையில் பெரும் ஆளுமை செலுத்தி வந்த மதுரை மணி ஐயர், எம் எம் தண்டபாணி தேசிகர், முசிறி சுப்ரமணிய ஐயர், மதுரை சோமு, மகாராஜபுரம் சந்தானம் உட்பட புகழ்பெற்ற பல கலைஞர்களுடன் லால்குடி ஜெயராமன் இணைந்து பணியாற்றியுள்ளார். 70 ஆண்டுகள் இசை வாழ்க்கை எனினும் அவரது தந்தை கோபால ஐயரைப் போலவே எந்த ஒரு பெண் பாடகருக்கும் அவர் பக்கவாத்தியம் வாசித்தது இல்லை என்கிற விமர்சனமும் அவர் மீது இருந்தது. லால்குடி ஜெயராமன் தனது 12 வது வயதில் ஒரு பக்கவாத்தியக்காரராக தனது இசைப் பயணத்தை தொடங்கினார். தனது 70 ஆண்டு கால இசை வாழ்க்கையில் ஒரு வயலின் கலைஞராக மட்டுமல்லாமால் ஒரு சிறந்த இசையமைப்பாளராகவும் திகழ்ந்த அவர் பல வர்ணங்கள், பாடல்கள் மற்றும் தில்லானாக்களை அவர் இயற்றியுள்ளார். தனி வாசிப்பு, பக்கவாத்தியம் என்பதற்கு அப்பாற்பட்டு வயலின், வீணை, புல்லா
ங்குழல் ஆகிய வாத்தியங்களை ஒரே நேரத்தில் வாசிக்கும் வீனா-வேணு-வயலின் எனும் ஒரு புதிய கச்சேரி வகையையும் அவர் அறிமுகப்படுத்தினார். எடின்பரோ நகரில் நடைபெற்ற ஓர் இசை விழாவில் லால்குடி ஜெயராமன் வயலின் வாசிப்பை மிகவும் வியந்து புகழ்ந்த பிரபல மேற்கத்திய வயலின் கலைஞர் யஹூதி மெனுயின் தனது இத்தாலிய வயலினை அவருக்கு அன்பளிப்பாக வழங்கினார். இந்திய அரசின் பத்மவிபூஷன் விருது உட்பட பல உயரிய விருதுகளையும் கௌரவ டாக்டர் பட்டங்களையும் அவர் பெற்றுள்ளார். லால்குடி ஜெயராமன் இசை அமைத்த ஒரே தமிழ்த் திரைப்படமான சிருங்காரம் படத்திற்கு தேசிய விருது பெற்றார். அவரது மறைவுக்கு பல்தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நன்றி:பி.பி.சி 

21 ஏப்ரல் 2013

பிரபுதேவா படத்தில் சிங்கள நடிகை!

கோடம்பாக்கத்தில் இருந்து எந்தவொரு நடிகரோ, நடிகையோ படப்பிடிப்புக்காககூட இலங்கைக்கு செல்லக்கூடாது என்றொரு கட்டுப்பாடு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழில் பிசியாகி இந்திக்கு சென்ற அசின்கூட ஒரு பாலிவுட் படத்துக்காக இலங்கை சென்று வந்த ஒரே காரணத்துக்காக அவரை தமிழ்ப்படத்தில் நடிக்க வைக்கக்கூடாது என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தெலுங்கில் தான் இயக்கியுள்ள ராமைய்யா வாஸ்தவைய்யா என்ற படத்தில் ஒரு நாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்க வைத்துள்ள பிரபுதேவா, இன்னொரு வேடத்தில் நடிக்க ஜாக்குலின் பெர்ணான்டஸ் என்றொரு சிங்கள நடிகையை நடிக்க வைத்துள்ளாராம். இந்த விசயத்தை இதுவரை சீக்ரெட்டாகத்தான் வைத்திருந்தார். ஆனால் இப்போது படம் திரைக்கு வருவதால் வெளியில் கசிந்து விட்டது. அதோடு, மேற்படி நடிகையும் ஆந்திர மீடியாக்களுக்கு தான் கொடுக்கும் பேட்டிகளில் தனது மொத்த புராணத்தையும் வாசித்து விட்டதால், இலங்கைத்தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் கோலிவுட் கலைஞர்கள் கடும் ஆவேசமடைந்துள்ளனர். தமிழ் சினிமா நடிகரான பிரபுதேவா, எப்படி ஒரு சிங்கள நடிகையை தனது படத்தில் நடிக்க வைக்கலாம் என்று சொல்லிக்கொண்டு, அவர் அடுத்து தமிழ்நாட்டுப்பக்கம் வரட்டும் என்று போர்க்கொடி பிடிக்க காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

17 ஏப்ரல் 2013

டி.கே.ராமமூர்த்தி காலமானார்!

பழம்பெரும் இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது (92). மூச்சுத்திணறல் காரணமாக டி.கே.ராமமூர்த்தி நேற்று தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் காலமானார். அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக ராயப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர். திரையிசையில் மகத்தான சாதனை படைத்தவர்கள் மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ். விஸ்வநாதன் -டிகே.ராமமூர்த்தி. இருவரும் இணைந்து 700க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ளனர். ராமமூர்த்தி, தனியாகவும் பல்வேறு படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

15 ஏப்ரல் 2013

திரையுலகம் கண்ணீர் அஞ்சலி!

தமிழ் சினிமாவில் இசையில் தனக்கென ஒரு இடம் வகித்த பி.பி. ஸ்ரீனிவாஸ் நேற்று மரணமடைந்தார். அவர் உடல் இன்று சென்னையில் தகனம் செய்யப்பட்டது. அவருக்கு திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி விடை கொடுத்தனர். 83 வயதான பி.பி.ஸ்ரீனிவாஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்திப் படங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், முத்துராமன், ரவிச்சந்திரன், என்.டி.ராமாராவ், ராஜ்குமார் படங்களில் ஏராளமான பாடல்கள் பாடியுள்ளார். பி.பி.ஸ்ரீனிவாஸ் உடல் சி.ஐ.டி. நகரில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. பி.பி.ஸ்ரீனிவாஸ் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். முதல்வர் சார்பில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேயர் சைதை துரைசாமி, இசையமைப்பாளர்கள் எம்.எஸ். விஸ்வநாதன், சங்கர் கணேஷ், தேவா, கவிஞர்கள் வாலி, வைரமுத்து, பின்னணி பாடகிகள் பி.சுசிலா, எஸ். ஜானகி, வாணிஜெயராம், மாலதி, எஸ்.பி.சைலஜா உள்பட திரையுலகினர் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திர சேகர் ஆகியோர் வெளியிட்டுள்ள அனுதாப செய்தியில், "பி.பி.ஸ்ரீனிவாஸ் தேனிசை குரலாக ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடி ரசிகர்கள் உள்ளங்களில் நிறைந்தார். தமிழக அரசு அவருக்கு இயல் இசை நாடக மன்றத்தில் பதவி அளித்து கவுரவித்தது. பி.பி.ஸ்ரீனிவாஸ் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்," என்று குறிப்பிடப்பட்டுள்ளனர். பி.பி.ஸ்ரீனிவாஸ் உடல் இன்று பிற்பகல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கண்ணம்மாபேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

13 ஏப்ரல் 2013

ஆஜரானார் அஞ்சலி!

காணாமல் போய்விட்டதாக கடந்த ஒரு வார காலம் பரபரப்பாக பேசப்பட்ட அஞ்சலி, நேற்று இரவு ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் காவல் நிலையத்தில் ஆஜரானார். தன் சித்தி பாரதி தேவியும் இயக்குநர் களஞ்சியமும் தன்னை கொடுமைப்படுத்துவதாக பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்த அஞ்சலி, ஹைதராபாத் ஓட்டலிலிருந்து கடந்த திங்கள் கிழமை மாயமானார். இதுகுறித்து அவரது சகோதரர் ஹைதராபாத் போலீசில் புகார் செய்தார். அவரது சித்தி பாரதி தேவி சென்னை போலீசில் புகார் செய்தார். சென்னை உயர்நீதிமன்றத்திலும் ஆட்கொணர்வு மனு அளித்திருந்தார். அஞ்சலி படங்கள் இந்நிலையில், 12.04.2013 வெள்ளிக்கிழமை இரவு நடிகை அஞ்சலி ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் போலீஸ் முன் ஆஜரானார். கடந்த 5 நாட்களாக அஞ்சலி எங்கு தங்கியிருந்தார்? அவருக்கு அடைக்கலம் தந்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்தனர். ஹைதராபாத் வடக்கு பகுதி துணை கமிஷனர் சுதீர் பாபு கூறுகையில், "மன உளைச்சல், தொடர்ச்சியான ஷூட்டிங் காரணமாக மும்பை சென்றிருந்ததாக அஞ்சலி கூறினார். அவரது வாக்குமூலத்தை விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம்," என்றார். ஹைதராபாத் போலீசாரின் விசாரணைக்குப் பிறகு நடிகை அஞ்சலி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் ஆஜராகி விளக்கமளிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

10 ஏப்ரல் 2013

நயன்தாரா நடித்துள்ள லவ் ஸ்டோரி!

நாகார்ஜூனாவுடன் நயன்தாரா நடித்துள்ள லவ் ஸ்டோரி திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. தாசரி நாராயண ராவ் தயாரிப்பில், தெலுங்கு இயக்குநர் தசரத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. சமீபத்தில்தான் இப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. தமாம் இசையில் உருவான இப்படத்தில் 7 பாடல்கள் இடம்பெற்றுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் அமெரிக்காவில் முடிந்து விட்ட நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. அமெரிக்காவில் நாசா மையத்துக்கு அருகே இப்படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பது படத்தின் சிறப்பாகக் கூறப்படுகிறது. நயன்தாராவின் மறுப்பிரவேசத்தை அதிகமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு இப்படம் நிச்சயமாக நல்ல விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் பெயரிடப்படாத இப்படத்தை ஏப்ரல் 19ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

09 ஏப்ரல் 2013

அஞ்சலி ஹோட்டலில் இருந்து மாயம்!

ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நடிகை அஞ்சலி மாயமாகியுள்ளார். சித்தியுடன் ஏற்பட்ட தகராறுக்கு பிறகு நடிகை அஞ்சலி தனது சித்தப்பாவுடன் ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார்.
ஹோட்டலில் தங்கி அவர் ஷூட்டிங்கிற்கு சென்று வந்தார். இந்நிலையில் நேற்று காலையில் இருந்து அவரைக் காணவில்லை. அவரது சித்தப்பா வெளியே சென்றபோது அஞ்சலி மாயமாகியுள்ளார். அவரது செல்போனுக்கு அழைத்தாலும் சுவிட்ச் ஆப் என்று வருகிறது. அஞ்சலி இந்தி படமான போல் பச்சன் தெலுங்கு ரீமேக்கில் அசின் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த பட ஷூட்டிங்கிற்காக தான் அவர் ஹைதராபாத்தில் தங்கியிருந்தார். இந்நிலையில் அவர் மாயமாகியுள்ளதால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. தனது சித்தியும், இயக்குனர் களஞ்சியமும் பணத்துக்காக தன்னை கொடுமைப்படுத்துவதாக அஞ்சலி புகார் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

08 ஏப்ரல் 2013

அவுஸ்திரேலியாவில் சூதாடிய அமலா!

ஆஸ்திரேலியாவில் நடிகர் சுரேஷுடன் இணைந்து சூதாடி வெற்றி பெற்றிருக்கிறார் நடிகை அமலாபால். விஜய் நடிக்கும் 'தலைவா' படத்தின் படப்பிடிப்பு இப்போது ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றிருக்கிறார் நடிகை அமலாபால். படப்படிப்பு முடிந்ததும் அமலாபாலுக்கு ரொம்பவே போரடித்து விட்டதாம். இதனால் வெளியே சுற்றிப் பார்க்க கிளம்பிய அவர் அன்றைய பொழுதை கழிக்க சூதாட்ட விடுதிக்குள் புகுந்து ஒரு ஆட்டம் ஆடினாராம். முதலில் தோல்வியை சந்தித்த அமலாபால் பின்னர் சுரேஷுடன் இணைந்து ஆடியிருக்கிறார். அதில் அமலாபாலுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. இதனை பெருமையாக சொன்ன அமலா பால், சூதாட்டத்தில் தனக்கு மிகவும் ராசியான ஜோடி சுரேஷ்தான். நானும் அவரும் ஒரு ஆட்டத்தில் வென்றோம் என்று கூறியுள்ளார்.