பக்கங்கள்

15 அக்டோபர் 2017

மன அழுத்தத்தால் பாதிப்பு-தீபிகா படுகோனே!

மனநலனில் மாறுபடும் தீபிகா..பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன், தான் கடந்த காலத்தில் மன அழுத்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்ததாக சமீபத்தில் மனந்திறந்து சொல்லியிருந்தார். அவர் அந்த மனஅழுத்தத்தில் இருந்து மீண்டு விட்டாரா என்று கேட்டபோது, “நான் மன அழுத்தத்தில் இருந்து முழுமையாக மீண்டுவிட்டேன் என்று என்னால் சொல்ல முடியவில்லை. மன அழுத்தம் மீண்டும் என்னைத் தாக்குமோ என்ற பயம் இன்றும் மனதின் ஓரத்தில் இருந்துகொண்டிருக்கிறது. அவ்வளவு மோசமான அனுபவம் அது” என்கிறார். ‘இப்படி நீங்கள் உங்களின் மனஅழுத்தம் பற்றி வெளிப்படையாகப் பேசுவதால் உங்களின் படவாய்ப்புகள் பாதிக்கப்படுமா?’ என்ற அடுத்த கேள்விக்கு தீபிகா, “எனக்கு மனஅழுத்தப் பிரச்சினை இருப்பதால் என்னால் நன்றாக நடிக்க முடியாது என்று சிலர் நினைக்கலாம். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. திரையுலகைப் பொறுத்தவரை தற்போது நான் நல்லநிலையில் இருக்கிறேன். நான் நடிக்க விரும்பும் படங்களை சரியாக தேர்வுசெய்ய என்னால் முடியும். ஆனால் எல்லோராலும் அவ்வளவு தெளிவாக முடி வெடுக்க முடியுமா என்பது எனக்கு தெரியாது..” என்கிறார். மனநலத்தை ஒரு பாடமாக பள்ளிகளில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதும் தீபிகாவின் விருப்பமாக இருக்கிறது. “பள்ளிகளில் பாடங்களுக்கு அடுத்து, உடற்கல்வி பற்றித்தான் பேசப் படுகிறது. நான் படித்த பள்ளியிலும் உடற்கல்விக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் மனநலத்துக்காக எந்த வகுப்பும் நடத்தப்படவில்லை. அது நமது பாடத் திட்டத்திலேயே இல்லை. உடல் நலத்தைப் போல மனநலத்தின் முக்கியத்துவத்தையும் நாம் உணர்ந்து, பள்ளிகளில் அதை அறிமுகப்படுத்தி யிருந்தால், பல்வேறு பிரச்சினைகளில் இருந்து நம்மால் எளிதாக தப்பிவிடலாம்” என்று கூறுகிறார். ‘தி லிவ் லவ் லாப்’ என்ற அறக்கட்டளையையும் நிறுவி நடத்திவருகிற தீபிகா, “அரசின் கொள்கை வகுப்பாளர்களும், முக்கியப் பொறுப்பு வகிப்பவர்களும் மனநலத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள வேண்டும், பரவலாக நிலவும் மனஅழுத்தத்தைக் குறைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் மனஅழுத்தம் இருப்பவர்கள் அதைப் பற்றி வெளிப் படையாகப் பேச முன்வருவார்கள். ‘எங்கே நமது மனநலப் பிரச்சினையைப் பற்றிக் கூறினால் வேலை போய்விடுமோ?’ என்ற பயத்தில் இருப்பவர்களும் அதிலிருந்து விடுபடுவார்கள்” என்று தீபிகா யோசனை சொல்கிறார். தனது மனநலப் பிரச்சினை போராட்டம் தொடர்பாக வெளிப்படையாகப் பேசியது குறித்து தீபிகா கூறுகையில், “மனஅழுத்தத்தின் தாக்கங்கள் குறித்துப் புலம்ப வேண்டும் என்பது எனது ஆசையில்லை. மாறாக, மனநலம் சார்ந்த விஷயங்கள் குறித்து இந்தியாவிலும், உலகத்திலும் மக்களின் பார்வை மாற வேண்டும் என்பதே எனது ஆசை” என்று சொல்லி முடிக் கிறார். பலரும் பேசத் தயங்கும் விஷயம் பற்றி பேச முன்வந்ததற்காகவே தீபிகா படுகோனை பாராட்டலாம்.