பக்கங்கள்

27 ஆகஸ்ட் 2011

பங்களா கட்டுகிறார் சமீரா.

மும்பையின் பெருமைக்குரிய கடற்கரையான ஜூஹுவில் சொந்த பங்களா கட்டுகிறார் நடிகை சமீரா ரெட்டி. வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் சமீரா. தெலுங்கு, இந்தியிலும் பிஸியாக உள்ளார். அவர் மும்பையின் புகழ்மிக்க ஜூஹு கடற்கரையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு பங்களா ஒன்றை கட்டிக் கொண்டிருக்கிறார்.
இதுகுறித்து சமீரா அளித்துள்ள பேட்டியில், மும்பையில் பெரிய வீடு கட்ட வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. அது தற்போது நிறைவேறுகிறது. அங்குள்ள ஜூஹு பகுதியில் இடம் வாங்கி வீடு கட்டிக் கொண்டு இருக்கிறேன். எனது தந்தையும், தம்பியும் அங்கேயே முகாமிட்டு கட்டுமான பணிகளை கவனித்து வருகின்றனர். எனது ஆசைப்படி வீட்டை வடிவமைத்து கட்டி வருகிறார்கள். நவம்பரில் கிரஹப்பிரவேசம் நடத்த உள்ளோம், என்று கூறியுள்ளார்.
தமிழில் தற்போது வெடி, வேட்டை படங்களில் நடித்து வரும் சமீரா, தனது இந்த நிலைக்குக் காரணம் இயக்குநர் கவுதம் மேனன் தான். வாரணம் ஆயிரம் படத்தில் அறிமுகபடுத்தியதால்தான் இந்த நிலைக்கு உயர முடிந்தது. கவுதம் மேனன் எப்போது அழைத்தாலும் கதை, கேரக்டர் என்ன என்று கேட்காமல் உடனடியாக நடிக்க சம்மதிப்பேன், என்றும் கூறியிருக்கிறார்.

24 ஆகஸ்ட் 2011

கமலின் ஜோடி அனுஷ்கா.

கமல் இயக்கி, நடிக்க இருக்கும் விஸ்வரூபம் படத்தில் ஹீரோயின் யார் என்ற இழுபறி ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. படத்தில் கமலுக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்க இருக்கிறார். "மன்மதன் அம்பு" படத்திற்கு பிறகு கமல் நடிக்க இருக்கும் படம் "விஸ்வரூபம்". இப்படத்தை கமலே இயக்கி நடிக்கிறார். படத்தின் நாயகியாக முதலில் பாலிவுட்டின் இளம்நடிகை சோனாக்ஷி சின்ஹா தான் நடிப்பதாக இருந்தது. இதற்கான அறிவிப்பு எல்லாம் வெளியாகி இருந்தநிலையில், டைரக்டர் மாற்றம், விசா பிரச்சனை என்று தொடர்ந்து விஸ்வரூபம் படத்திற்கு முட்டுக்கட்டை ஏற்பட்டது. தனக்கு கொடுக்கப்பட்ட கால்ஷீட்டையும் தாண்டி படம் ஆரம்பிக்காததால், இந்தியில் பல வாய்ப்புகள் பறிபோவதாக கூறி, விஸ்வரூபம் படத்தில் இருந்து விலகுவதாக சோனாக்ஷி அறிவித்தார். இதனால் கமலின் படம் மீண்டும் தொங்கலில் விழுந்தது.
இந்நிலையில் சோனாக்ஷிக்கு பதிலாக தீபிகா படுகோனேயை நடிக்க வைக்க கமல் தீவிர முயற்சி மேற்கொண்டார். ஆனால் அதுவும் கைகூடாததால், கடைசியாக தமிழ், தெலுங்கின் முன்னணி நாயகியான அனுஷ்காவை நாடினார். அவரும் உடன் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இதன்மூலம் விஸ்வரூபம் படத்திற்காக நாயகி பிரச்சனை ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.
அடுத்தமாதம் ஐரோப்பா மற்றும் கனடாவில் சூட்டிங் துவங்க இருக்கிறது. சமீபத்தில் தான் இந்தப் படத்துக்காக பிரமாதமான லொகேஷன்களை பார்த்துவிட்டு வந்துள்ளார் கமல்ஹாசன்.

19 ஆகஸ்ட் 2011

சின்னப்பொண்ணு தமன்னா!

நான் இன்னும் சின்ன பெண் தான் என்று வேலூரில் நகைக்கடை திறப்பு விழாவுக்கு வந்த நடிகை தமன்னா தெரிவி்த்தார்.
நேற்று வேலூரில் நகைக்கடை ஒன்றை திறந்து வைத்தார் நடிகை தமன்னா. தமன்னா வருவதை அறிந்த ரசிகர்கள் கடைக்கு முன் குவிந்துவிட்டனர். கடையை திறந்து வைத்துவிட்டு வெளியே வந்த தமன்னாவை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்தனர்.
கூட்டம் அதிகமாகவதை உணர்ந்த கடை ஊழியர்கள் மற்றும் போலீசார் தமன்னாவை பாதுகாப்பாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். அப்போது லேசான தடியடியும் நடத்தப்பட்டது.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த தமன்னா கூறுகையில்,
நான் வேலூருக்கு வந்துள்ளதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அவர்கள் அன்பைப் பார்த்து நெகிழ்ந்து போனேன். நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி.
தற்போது தெலுங்கில் 3 படங்களில் நடித்து வருகிறேன். நான் இன்னும் சின்ன பெண் தான். அதனால் 3 ஆண்டுகள் கழித்து தான் திருமணம் பற்றி யோசிப்பேன் என்றார்.
மெதுவா யோசிங்க, ஒன்னும் அவசரம் இல்லை...!

17 ஆகஸ்ட் 2011

ஐஸ்வர்யாவுடன் சண்டையில்லை.

ஐஸ்வர்யா தனுஷுடன் தனக்கு சண்டை எதுவும் இல்லை என்றும் சமாதானமாகவே பிரிந்துவிட்டதாகவும் அமலா பால் தெரிவித்துள்ளார்.
ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் '3' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஒப்பந்தமான அமலா, கால்ஷீட் சொதப்பலால் படத்திலிருந்து நீக்கப்பட்டார்.
இப்போது அவருக்குப் பதில் புதிதாக ஒரு ஹீரோயினை ஒப்பந்தம் செய்ய தேடி வருகின்றனர் ஐஸ்வர்யாவும் தனுஷும்.
இதற்கிடையே, பெரிய படத்திலிருந்து அமலா நீக்கப்பட்டதால், அவரை ஒப்பந்தம் செய்வது குறித்து தயாரிப்பாளர்கள் யோசிக்க ஆரம்பித்துள்ளனர்.
தமிழில் அடுத்து முப்பொழுதும் உன் கற்பனைகள் மட்டுமே அமலா பால் கைவசம் உள்ளது. மீதியெல்லாம் தெலுங்குப் படங்கள்தான். இன்னொன்று அறிமுகமான தமிழ் சினிமாவை விட, தெலுங்குப் படங்களில் நடிப்பதையே அவர் கவுரவமாகக் கருதுகிறார்.
சமீபத்தில் தனது முதல் தெலுங்குப் படத்துக்காக படப்பிடிப்புக்கு சென்று வந்த அமலா, தெலுங்கில் நடிப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக பேட்டி கொடுத்திருந்தார். மேலும் மேலும் அதிக தெலுங்குப் படங்களில் நடிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
தெலுங்குப் படங்களுக்காகத்தான் தமிழ்ப் படங்களை புறக்கணிக்கிறீர்களா என்று கேட்டதற்கு, "தெலுங்கில் பெரிய வாய்ப்புகள் வருகின்றன. எனவே அவற்றுக்கு முன்னுரிமை தருகிறேன். '3' படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கு காரணம், கால்ஷீட் இல்லாததுதான். நான் அந்தப்படத்துக்கு அக்டோபரில் தேதி தருவதாகச் சொன்னேன். ஆனால் அவர்கள் செப்டம்பரில் கேட்டார்கள். எனவே அவர்களிடம் நல்ல முறையில் சொல்லிவிட்டே விலகினேன்," என்றார்.

14 ஆகஸ்ட் 2011

சினிமாவே வேண்டாம்!

தூத்துக்குடி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் கார்த்திகா. தற்போது சினிமா சங்காத்தமே வேண்டாம் என்று குட்பை சொல்லிவிட்டாராம்.
தூத்துக்குடி படத்தில் பாவாடை, தாவணியில் அழகாய் வலம் வந்தவர் கார்த்திகா. அந்த படத்தில் வரும் கருவாப் பையா, கருவாப் பையா பாட்டு அத்தனை பிரபலம். அதைத்தொடர்ந்து நாளைய பொழுதும் உன்னோடு, மதுரை சம்பவம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அதன் பின்னர் அவரைக் காணவில்லை.
கொஞ்ச நாளாக கார்த்திகாவை ஆளையே காணோமே என்று நினைத்து தேடிய போது தான் அவர் சினிமாவுக்குக் குட்பை சொல்லிய தகவல் கிடைத்தது. அம்மணி சினிமாவே வேண்டாம் என்று குட்பை சொல்லிவிட்டாராம். சினிமாவுக்கு டாட்டா காட்டி விட்ட அவர் சொந்த ஊரான கேரளாவுக்குப் போய் விட்டாராம். சினிமா சம்பந்தப்பட்ட யாருடனும் அவருக்கு பேச விருப்பமில்லையாம்.
ஏன் இந்த திடீர் முடிவு? அப்படி என்ன கசப்பான அனுபவத்தை சந்தித்தார் கார்த்திகா?

11 ஆகஸ்ட் 2011

அனுஷ்காவிற்கு போட்டி அனுஷ்கா!

பாலிவுட்டில் ஒரு அனுஷ்கா இருக்கிறார்.... அனுஷ்கா சர்மா... பிரபலமான நடிகையும் கூட. இப்போது அவருக்குப் போட்டியாகப் போகிறார் இங்கே டாப் இடத்தில் உள்ள அனுஷ்கா அதாவது அனுஷ்கா ஷெட்டி!
இன்றைய தேதிக்கு அனுஷ்காவுக்கு தமிழ், தெலுங்கில் ஏகப்பட்ட வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கின்றன. ஆனாலும் அவர் இந்தியில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
அவரது ஆர்வத்தைப் புரிந்து கொண்டு இரண்டு பெரிய படநிறுவனங்கள் அவரிடம் கதை சொல்லி ஓகேவும் வாங்கிவிட்டனவாம்.
இதில் ஒரு படத்துக்கு தேதி கூட கொடுத்து விட்ட அனுஷ்கா, அட்வான்ஸ் மட்டும் இப்போது வேண்டாம் என சொல்லிவிட்டாராம்.
தெற்கிலிருந்து அனுஷ்கா வருகிறார் என்றதுமே, கடுப்பாகிவிட்டாராம் பாலிவுட்டில் ஏற்கெனவே உள்ள அனுஷ்கா சர்மா. தயாரிப்பாளர்களுக்கு போன் போட்டு, இங்கே ஒரு அனுஷ்கா இருக்கும்போது தெற்கிலிருந்து அவரை வேறு அழைத்து வருகிறீர்களே, சரியா என சிணுங்குகிறாராம்.
என்ன செய்வது... சினிமாவில் காட்சிகள் மாறிக் கொண்டே இருந்தால்தானே சுவாரஸ்யம்!

07 ஆகஸ்ட் 2011

கல்யாணம் பற்றி முடிவு செய்யவில்லை.

என் கல்யாணம் பற்றி நான் இன்னும் முடிவு செய்யவில்லை; எனக்கு மாப்பிள்ளையாக பார்த்திருப்பதாக கூறப்படும் தொழில் அதிபர் என் நண்பர்தான், கணவர் இல்லை என்று நடிகை த்ரிஷா கூறியுள்ளார். கல்யாணம் பற்றி அடுத்த வருடம்தான் சிந்திப்பேன் என்றும் அவர் கூறியிருக்கிறார். 28 வயதாகும் நடிகை த்ரிஷாவுக்கு செப்டம்பரில் நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாயின. அவரது கணவர் சென்னையை சேர்ந்த தொழில் அதிபராகவோ, சாப்ட்வேர் என்ஜினியராகவோ இருக்கலாம் என்று முதலில் வந்த செய்திகள் தெரிவித்தன. பின்னர் சென்னையை சேர்ந்த இளம் தொழிலதிபர் அம்ருத்தைத்தான் த்ரிஷா திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார் என்று கூறப்பட்டது. ஏனென்றால் அம்ருத்தும், த்ரிஷாவும் ஹோட்டல் பார்ட்டிகளுக்கு ஒன்றாக சென்று வந்ததால் அப்படி கூறப்பட்டது. இதற்கிடையில் மாப்பிள்ளை பார்ப்பது தொடர்பாக த்ரிஷாவுக்கும், அவரது தாய் உமாவுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாயின.
இத்தனை குழப்பங்களுக்குப் பிறகு த்ரிஷா ஒரு அதிரடி பேட்டி கொடுத்திருக்கிறார். அதில், எனக்கு திருமணம் என்று எத்தனை தடவைதான் செய்திகள் வருமோ தெரியவில்லை. அம்ருத் என் நண்பர்தான். கணவர் அல்ல. பல நிகழ்ச்சிகளில் நாங்கள் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டிருக்கிறோம். அவ்வளவுதான். எனக்கு கணவராக வருபவரை இதுவரை நான் சந்திக்கவில்லை. என் திருமணம் அடுத்த வருடம் ஆரம்பத்தில் நடக்கும். அப்போது பார்த்து கொள்ளலாம், என்று கூறியிருக்கிறார்.

03 ஆகஸ்ட் 2011

அனுயாவுக்கு முப்பது இலட்சம்!

ரூ.30 லட்சம் இருந்தா வாங்க; இல்லாட்டி என் வீட்டுப்பக்கமே வந்துடாதீங்க... என்று டைரக்டர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை விரட்டியடித்து வருகிறாராம் நடிகை அனுயா. "சிவா மனசுல சக்தி" மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் அனுயா. எப்படிப்பட்ட கவர்ச்சியான வேடத்திலும் நடிக்க தயங்காத அனுயா, அந்த படத்தை தொடர்ந்து "மதுரை சம்பவம்", "நகரம்" போன்ற படங்களில் நடித்தார். அனுயா படங்கள் வணிக ரீதியில் ஓரளவு நன்றாகவே போனாலும், வாய்ப்புகள்தான் வர மறுக்கின்றன.
இந்நிலையில்தான் டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் "நண்பன்" படத்தில் நடிக்க அம்மணிக்கு வாய்ப்பு கிடைத்தது. விஜய் பட வாய்ப்பு என்றதும் ஓ.கே., சொன்ன அனுயா படத்தில் விஜய்க்கு அக்கா கேரக்டர் என்றதும் சம்பளத்தை ரூ.30 லட்சம் வரை உயர்த்தி விட்டாராம். அக்கா வேட விஷயத்தை வெளியே கசிய விடக்கூடாது என்று படக்குழுவினருக்கு அன்புக்கட்டளை விதித்தாலும், விஷயம் கசிந்து, பல டைரக்டர்கள் அக்கா கேரக்டர்களோடு அனுயா வீட்டு வாசலுக்கு வரத்தொடங்கி விட்டனர். அவர்களையெல்லாம் நோ சொல்லி திருப்பி அனுப்பி விட்டதோடு, ரூ.30 லட்சம் சம்பளம் என்றால் வாருங்கள்; இல்லாட்டி வேறு ஆளை பாருங்கள் என்று கூறி வருகிறாராம்.
அக்கா வேடம் பற்றி அனுயா அளித்துள்ள் பேட்டியில், விஜய் மற்றும் ஷங்கர் படம் என்பதால் இந்த வேடத்தை ஏற்றுக் கொண்டேன். மற்றபடி, நான் ஹீரோயின் வேடங்கள்தான் செய்வேன். நான் நல்ல படங்களில் நடித்துள்ளேன். எனக்கான சம்பளத்தை நான் கேட்பதில் என்ன தவறு?, என்று கேள்வி எழுப்பியுள்ளார். அது சரி!

01 ஆகஸ்ட் 2011

கோடிகளை வெறுத்த தீபிகா!

பாலிவுட் பிரபலங்களுக்கு அடிக்கடி மெகா ஆஃபர்கள் வரும்… எதற்காக தெரியுமா… அரை நிர்வாணம் அல்லது முக்கால் நிர்வாணத்துடன் ஆட்டம் போட / போஸ் கொடுக்க. இதற்கு பல கோடிகளை அள்ளித் தரவும் வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபர்கள் தயாராக இருப்பார்கள்.
ஏற்கெனவே ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைஃப், ப்ரியங்கா சோப்ரா போன்றவர்களுக்கு இதுபோன்ற வாய்ப்பு வந்ததும் அவர்கள் மறுப்பு தெரிவித்து அது செய்தியாக வந்ததும் தெரிந்திருக்கும்.
இப்போது அப்படியொரு வாய்ப்பு ராணா நாயகி தீபிகா படுகோனுக்கு வந்துள்ளது. ஆனால் இந்த முறை தொழிலதிபர்ளிடமிருந்தல்ல… உலகப் புகழ்பெற்ற ப்ளேபோய் பத்திரிகையிடமிருந்து. ரூ 7.5 கோடி வரை தருகிறோம், பிளேபாய் செப்டம்பர் மாத இதழுக்கு அரை நிர்வாணமாக… அதாவது டாப்லெஸ்ஸாக போஸ் தர வேண்டும் என்று கேட்டார்களாம்.
ஆனால் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லையாம் தீபிகா. பிளேபாய்க்கு விளம்பர படங்கள் எடுத்துத் தரும் அந்த சர்வதேச நிறுவனம் எவ்வளவோ முயன்றும் இந்த ஆஃபரை ஒப்புக் கொள்ளவே இல்லையாம் தீபிகா.
பிளேபாய் வாய்ப்புக்காக ஹாலிவுட், பாலிவுட் நடிகைகள் தவம் கிடக்கையில், தீபிகா உறுதியாக மறுப்புத் தெரிவித்திருப்பது அவரை ஆச்சர்யத்துடன் பார்க்க வைத்துள்ளது சக பாலிவுட் நடிகைகளை.