பக்கங்கள்

11 அக்டோபர் 2015

நகைச்சுவை அரசியின் இறுதி நிகழ்வுகள் இன்று!

ஆச்சி மனோரமா(புளியங்கூடல்.கொம்)
பழம்பெரும் நடிகை மனோரமா உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78. ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் மனோரமா. தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் 'ஆச்சி' என அன்போடு அழைக்கப்பட்டார்.தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். அண்ணா மற்றும் கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவ் ஆகியோருடன் இவர் நடித்திருந்ததால் இந்த பெருமையை பெற்றிருந்தார்.மனோரமா தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் பிறந்தவர்.இவரது இயற்பெயர் கோபி சாந்தா.பத்மஸ்ரீ,தமிழ்நாடு அரசின் கலைமாமணி,தேசிய திரைப்பட விருது போன்ற பல விருதுகளை பெற்றவர் மனோரமா. பின்னணி பாடல்களையும் பாடியுள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக,சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மனோரமா சனிக்கிழமை இரவு 11 மணியளவில் மரணமடைந்தார்.அவரது உடல் தகனம் இன்று மாலை(11.10.2015 ஞாயிறு) நடைபெறுகிறது. முதலில் கண்ணம்மா பேட்டை மயானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மயிலாப்பூரில் உள்ள இடுகாட்டில் தகனம் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.4 மணியிலிருந்து இறுதிச் சடங்குகள் தொடங்கி 6 மணிக்குள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.நகைச்சுவை அரசி,சரித்திர நாயகி ஆச்சி மனோரமாவிற்கு எமது புளியங்கூடல்.கொம் வலைக்குழுமத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கையாக்குகின்றோம்.

14 ஜூலை 2015

மெல்லிசை மன்னர் காலமானார்!

மெல்லிசை மன்னர் என தமிழ்ச் சமூகத்தால் அன்புடன் அழைக்கப்பட்ட பிரபல இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதன் இன்று அதிகாலை 4.15 மணிக்கு மரணமடைந்தார். அவருக்கு வயது 87. மனயங்கத் சுப்ரமணியன் விஸ்வநாதன் என்ற இயற்பெயர் கொண்ட எம்எஸ் விஸ்வநாதன் பாலக்காட்டில் உள்ள எலப்புள்ளி கிராமத்தில் 1928-ல் பிறந்தவர். அவரது பெற்றோர் மனயங்கத் சுப்பிரமணியன் - நாராயணி குட்டி. MS Viswanathan passes away நான்கு வயதில் தந்தையை இழந்து வறுமையில் வாடிய எம்எஸ்வி, மிக இளம் வயதிலேயே நாடகக் குழுவில் சேர்ந்தார். நடிக்கவும், பாட்டுப் பாடவுமே அவரது விருப்பமாக இருந்தது. 13 வயதில் திருவனந்தபுரத்தில் தனது முதல் மேடைக் கச்சேரியை நடத்திய எம்எஸ்வி, 1950களில் எஸ்எம் சுப்பையா நாயுடு மற்றும் சிஆர் சுப்பாராமன் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றினார். 1952-ல் சி ஆர் சுப்பாராமன் காலமாகிவிட, அந்த நேரத்தில் அவர் பணியாற்றிக் கொண்டிருந்த மருமகள், சண்டி ராணி, தேவதால் மற்றும் ஜெனோவா போன்ற படங்களை முடித்துக் கொடுத்தவர் எம்எஸ்விதான். பின்னர் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் தயாரித்த பணம் படத்துக்கு இசையமைப்பாளர்களாக எம்எஸ்வியும் டிகே ராமமூர்த்தியும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். எம்எஸ்வி - டிகே ராமமூர்த்தி இரட்டை இசையமைப்பாளர்கள் முதன் முதலில் அதிகாரப்பூர்வமாக அறிமுகமான படம் பணம்-தான். அதன் பின்னர் இந்த இரட்டையர்கள் காலம்தான் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்தது. 1952-லிருந்து 1965 வரை இந்த இருவரும் இணைந்து காலத்தால் மறக்க முடியாத பல காவியப் பாடல்களைப் படைத்தனர். இருவரும் இணைந்து 100-க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளனர். இது ஒரு மிகப்பெரிய சாதனையாகும். டிகே ராமமூர்த்தியைப் பிரிந்த பிறகு, தனியாக 700-க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்தார் எம்எஸ் விஸ்வநாதன். கடைசியாக அவர் இசையமைத்த படம் சுவடுகள். தமிழ் தவிர, மலையாளத்தில் 74 படங்களுக்கும், தெலுங்கில் 31 படங்களுக்கும் இசையமைத்துள்ளார் எம்எஸ்வி. கடந்த சில வாரங்களாகவே உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எம்.எஸ்.விஸ்வநாதன் இன்று அதிகாலை 4.15 மணிக்கு காலமானார். இவர் தென்னிந்திய பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருதும், சிறந்த இசையமைப்பாளருக்கான கேரள அரசு விருதும் பெற்றவர். காலத்தால் அழியாத பல காவியப் பாடல் தந்த எம்எஸ் விஸ்வநாதனின் மனைவி ஜானகி கடந்த 2012-ம் ஆண்டு மறைந்தார். எம்எஸ்வி - ஜானகி தம்பதிக்கு நான்கு மகன்கள், மூன்று மகள்கள். அவரது உடல் சென்னை சாந்தோமில் உள்ள இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறுகின்றன.

09 ஏப்ரல் 2015

நாகூர் ஹனீபா காலமானார்!

பிரபல இஸ்லாமிய பாடகரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரசார பாடகராக கம்பீரக் குரலில் முழங்கியவருமான "இசைமுரசு" நாகூர் ஹனீபா (வயது 90) சென்னையில் இன்று காலமானார். இஸ்லாமிய பாடல்களை உலகம் முழுவதும் ஒலிக்கச் செய்தவர் நாகூர் ஹனீபா. குறிப்பாக இறைவனிடம் கையேந்துங்கள் என்ற பாடல் அனைவரையும் கொள்ளை கொண்ட பாடல். இஸ்லாமிய மத பாடல்களை உலகம் முழுவதும் ஒலிக்கச் செய்தவர் நாகூர் ஹனீபா. குறிப்பாக இறைவனிடம் கையேந்துங்கள் என்ற பாடல் அனைவரையும் கொள்ளை கொண்ட பாடல்.அதேபோல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரசார பாடகராக ஹனீபா பாடிய பாடல்கள் காலத்தால் அழியாதவை. பேரறிஞர் அண்ணா காலத்திலிருந்து தமது பாடல்கள் மூலம் தி.மு.க. வளர்ச்சிக்கு உரமாக இருந்தவர் ஹனீபா. அதுவும் அழைக்கின்றார் அழைக்கின்றார் அண்ணா..... ஓடி வருகிறான் உதயசூரியன் போன்ற எண்ணற்ற பாடல்கள் தி.மு.க. கழகத்தின் வரலாற்றுப் பக்கங்களில் அழிக்க முடியாதவை. 90 வயதான நிலையில் முதுமை காரணமாக சென்னை கோட்டூர்புரத்தில் இன்று நாகூர் ஹனீபா காலமானார். அவரது உடலுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

24 ஜனவரி 2015

பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு!

வயிற்றுப் புற்றுநோய் காரணமாக தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் சிகிச்சைப் பலன் இன்றி இன்று மாலை 5.50 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 90. 1925ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் வெம்பாக்கத்தில் பிறந்தவர் வி.எஸ்.ராகவன். 1954-ஆம் ஆண்டு வெளிவந்த வைரமாலை என்ற தமிழ்ப்படத்தில் முதன்முறையாக அறிமுகம் ஆனார். முதலில் நாடகத்திலும் பிறகு சினிமாவிலும் தொடர்ந்து பல ஆண்டுகளாக நடித்து வந்த வி.எஸ்.ராகவன் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார். 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள வி.எஸ்.ராகவன் ஆல் இன் ஆல் அழகுராஜா, கலகலப்பு, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். சாகும் வரையிலும் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே வி.எஸ்.ராகவனின் ஆசையாக இருந்தது. இவர் கடைசியாக நடித்த காத்தாடி திரைப்படம் இன்னும் வெளிவரவில்லை. இந்நிலையில், உடல் நலக் குறைவால் வி.எஸ்.ராகவன் காலமானார். வி.எஸ்.ராகவன் இல்லம் மந்தைவெளி ராமகிருஷ்ணா நகரில் உள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை பெசன்ட் நகர் மயானத்தில் மறைந்த பழம்பெரும் நடிகரின் உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.