பக்கங்கள்

11 அக்டோபர் 2015

நகைச்சுவை அரசியின் இறுதி நிகழ்வுகள் இன்று!

ஆச்சி மனோரமா(புளியங்கூடல்.கொம்)
பழம்பெரும் நடிகை மனோரமா உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78. ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் மனோரமா. தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் 'ஆச்சி' என அன்போடு அழைக்கப்பட்டார்.தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். அண்ணா மற்றும் கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவ் ஆகியோருடன் இவர் நடித்திருந்ததால் இந்த பெருமையை பெற்றிருந்தார்.மனோரமா தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் பிறந்தவர்.இவரது இயற்பெயர் கோபி சாந்தா.பத்மஸ்ரீ,தமிழ்நாடு அரசின் கலைமாமணி,தேசிய திரைப்பட விருது போன்ற பல விருதுகளை பெற்றவர் மனோரமா. பின்னணி பாடல்களையும் பாடியுள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக,சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மனோரமா சனிக்கிழமை இரவு 11 மணியளவில் மரணமடைந்தார்.அவரது உடல் தகனம் இன்று மாலை(11.10.2015 ஞாயிறு) நடைபெறுகிறது. முதலில் கண்ணம்மா பேட்டை மயானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மயிலாப்பூரில் உள்ள இடுகாட்டில் தகனம் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.4 மணியிலிருந்து இறுதிச் சடங்குகள் தொடங்கி 6 மணிக்குள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.நகைச்சுவை அரசி,சரித்திர நாயகி ஆச்சி மனோரமாவிற்கு எமது புளியங்கூடல்.கொம் வலைக்குழுமத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கையாக்குகின்றோம்.