பக்கங்கள்

07 மார்ச் 2016

கலாபவன் மணி குறித்து மம்முட்டியின் குமுறல்!

கலாபவன் மணி
மறைந்த நடிகர் கலாபவன் மணி மறைவு குறித்து நடிகர் மம்முட்டி தனது வலைப்பூவில் உருக்கமாக எழுதியுள்ளார். அந்தக் குமுறல் நம்மை அப்படியே உருகச் செய்கிறது. அதன் தமிழாக்கம் இங்கே... 'இப்போதும் என்னால் நம்ப முடியவில்லை. மணி இனிமேல் மாம்பழம், திராட்சைகள் அடங்கிய கூடைகளுடன் என் வீட்டுக்கு வரமாட்டான் என்று. பெங்களுருவில் ஒரு படபிடிப்பில் இருந்தேன். அப்போது தொலைக்காட்சிகளில் ஸ்குரோலிங் ஓடத் தொடங்கியது. மணி இறந்து விட்டார் என்று அதில் செய்தி. சகோதரர் போல பழகியவரின் ஒருவர் மறைவு நம்மை எப்படி பாதிக்கும்? அப்படித்தான் என்னையும் பாதித்தது. என்னால் என்னை தேற்றிக் கொள்ள முடியவில்லை.குனிந்த தலையுடன் கண்ணீர் சிந்திய கண்களுடன் என் வீட்டுக்கு வந்த நாளில் இருந்து எனது வீட்டையும் தனது வீடு போலத்தான் அவன் நினைத்திருந்தான். என்னை ஒரு சகோதரராகவேத்தான் அவன் பார்த்தான். சிகரேட் குடிப்பான். நான் அந்த இடத்துக்கு வந்து விட்டால், கைக்குள் அதனை மறைப்பான். அந்த அன்பை என்னவென்று சொல்வது?'மறுமலர்ச்சி' என்ற தமிழ் படத்தில் நான் நடித்துக் கொண்டிருந்தேன். அந்த படத்தில் காமெடி நடிகராக நடிக்க வேண்டிய ஒருவர், அவர் கொடுத்தபடி படபிடிப்புக்கு வர முடியவில்லை. அப்போதுதான் இயக்குனநரிடம் கலாபவன் மணி பற்றி நான் கூறினேன். அவரை கூப்பிட்டால், பின்னர் எந்த காரணத்தைக் கொண்டும் திருப்பி அனுப்பக் கூடாது என்ற உறுதி மொழியையும் வாங்கிக் கொண்டேன்.ஏனென்றால் மிகச்சிறந்த நடிகன் அவன். குழந்தை மனம் கொண்ட அவனை எந்தவிதத்திலும் நோக விடக் கூடாது என்பதில் நான் குறியாக இருப்பேன். அதனாலேயே அந்த உறுதி மொழியை நான் வாங்கினேன். மணியை அழைத்துள்ளனர். அவனோ எனக்கு தமிழ் தெரியாதே என்று மறுத்துள்ளான். இது எனக்கு தெரிய வர, மணி மீது கோபம் கோபமாக வந்தது. மணியை போனில் அழைத்து திட்டி தீர்த்து விட்டேன். எவ்வளவு பெரிய வாய்ப்பு மறுக்கிறீயே என்று கத்தினேன். எனது கோபத்தை பார்த்து பயந்த மணி நாளை காலையே அங்கே இருக்கேன் என்றான். இப்படிதான் மணியின் தமிழ் சினிமா பயணம் தொடங்கியது. கடைசி வரை தமிழ் சினிமாவில் டிமான்ட் உள்ள நடிகனாகவேத்தான் மணி இருந்தான். சாலக்குடி பக்கத்துல எனக்கு படபிடிப்பு இருந்தா மணி சூட்டிங் ஸ்பாட்டுக்கே சிக்கன், மட்டன் இன்னும் பல இத்யாதிகளுடன் ஆஜராகி விடுவான். அன்னைக்கு முழுக்க அவன் கையால்தான் சாப்பாடு. மணியே பிரமாதமாக சமைப்பான். எனக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ அதனை சூட்டிங் ஸ்பாட்டுலயே செஞ்சு போடுவான்.மணி கொஞ்சம் சேட்டைக்காரன். அது எனக்கும் தெரியும். அவ்வப்போது எனக்கு தகவல் வரும். அவனை கொஞ்சம் கண்டிச்சு வைனு. நான் போனில் கூப்பிட்டு சத்தம் போடுவேன். இனிமேல் அப்படி நடக்காது என்பான். அமைதியாக கேட்டுக் கொள்வான். கார்ல் லீவிஸ் அவனுக்கு பிடித்த வீரர். அவரது உடல் அமைப்பை பார்த்து மயங்கிய அவன், தன்னையும் கார்ர் லீவிஸ் என்றே அழைக்கும்படி கூறுவான். மணி மிகச்சிறந்த நாட்டுப்புறக் கலைஞன். 100க்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியுள்ளான். பாடியுள்ளான். நாட்டுப்புற பாடல்கள் குழுவை உருவாக்கி நடத்தியும் வந்தான். ஒரு முறை வளைகுடா நாடு ஒன்றில் நிகழ்ச்சி. மணி மலையாள மொழியில் நாட்டுப்புற பாடல் ஒன்றை மேடையில் பாடுகிறான். அந்த நிகழ்வில் இருந்த அரேபியர்களுக்கு மலையாளம் தெரியாது. ஆனால் அந்த மக்கள் தன்னை மறந்து மேடைக்கு கீழே ஆடிக் கொண்டே இருக்கின்றனர். அதனை பார்த்து எனக்கு வியப்பு ஏற்படவில்லை. ஏனென்றால் மணியின் உடல் மொழி பாஷைகளை கடந்தது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக